Friday, September 17, 2010

மாமிச ஆடை அணிந்து வந்த பொப் இசைப் பாடகி 8 விருதுகள் சுவீகரிப்பு

அமெரிக்க லொஸ் ஏஞ்சல் நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற எம்..வி. வீடியோ இசை விருது வழங்கும் வைபவத்திற்கு இறைச்சியிலான ஆடை அணிகலன்களை அணிந்து வந்து உலகப் பிரபல பொப் இசைப் பாடகி லேடி ககா பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தினார்.
இவ்விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்ட 15 விருதுகளில் 8 விருதுகளை அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லேடி ககாவின் “பாட் ரொமான்ஸ்' வீடியோ பாடல் தொகுதியானது மிகச் சிறந்த நடன வீடியோ, மிகச் சிறந்த பெண் கலைஞரின் வீடியோ, மிகச் சிறந்த பொப் இசை வீடியோ, மிகச் சிறந்த நடன அசைவு வீடியோ, மிகச் சிறந்த இயக்கம், மிகச் சிறந்த பதிப்பாக்கம், மிகச் சிறந்த வீடியோ என்ப வற்றுக்கான விருதுகளை வென்றிருந்தது.

40 நாட்களாக சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை

சிலி நாட்டில் உள்ள தங்க சுரங்கம் கடந்த மாதம் 5-ந் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்தில் பாதை முழுவதும் அடைத்து கொண்டது. சுரங்கத்திற்கு உள்ளே 33 ஊழியர்கள் சிக்கி கொண்டனர். 700 மீட்டர் ஆழத்தில் அவர்கள் சிக்கி இருக்கிறார்கள்.
அவர்களை மீட்கும் முயற்சி 40 நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக தனியாக பாதை ஒன்றை அமைத்து வருகின்றனர். இந்த பாதை பணி முடிய இன்னும் 3 மாதங்கள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே அவர்களை மீட்க முடியும். சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களுடன் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அவர்கள் இருக்கும் இடத்துக்கு சிறிய குழாய் பாதை ஒன்று உள்ளது. அதன் வழியாக உணவு மற்றும் மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் ஏரியல் டிசோனா என்பவருடைய மனைவி எலிகாஷ்சுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. குழந்தை பிறந்த செய்தி டிசோனாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

துபாய் 5 ஸ்டார் ஹோட்டலில் வாழ்ந்த ஆசிய பிச்சைக்காரர்

துபாய்: பிச்சை எடுத்தாலும் பெரிய இடத்தில் எடுக்க வேண்டும் என்பார்கள். அதை நிரூபித்துள்ளார் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரர். ஆசியாவைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் துபாயில் ஸ்டார் ஹோட்டலில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை துபாய் சுற்றுலா பாதுகாப்புத் துறை தலைவர் மேஜர் முஹம்மது ராஷித் அல் முஹைரி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பிச்சை எடுத்ததற்காக கைதாகியுள்ள அந்த நபரின் பெயரையோ, அடையாளத்தையோ அவர் கூறவில்லை. இந்த பிச்சைக்காரரை ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேற்றியும் இந்தத் தொழிலில் கிடைக்கும் அதிக வருமானத்தால் ஈர்க்கப்பட்டு திரும்ப வந்திருக்கிறார் என்று அல் முஹைரி தெரிவித்ததாக கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த ஆண்டு ரமலான் மாதத்திலும், ஈத் அன்றும் சுமார் 360 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிச்சை எடுத்ததற்காக கைதானவர்களில் பெரும்பாலானோர் ஆசியர்களும், அரபியர்களும் தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.



1929

குழந்தை பிறப்பதை ஸ்கெய்ப் மூலம் கண்ட அமேரிக்க சிப்பாய்!

ஸ்கெய்ப் (skype) மற்றும் ஜீடாக் (Gtalk) போன்ற பல வீடியோ சாட் இணைய சேவைகளின் மூலம் நாம் மற்றவரை பார்த்து உரையாடும் வசதியுள்ளது. இவை பெரும்பாலும் அரட்டை அடிப்பதற்காகவே பயன்பட்டுவருகிறது. சிலர் அலுவலக பணிக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் இவ்வகை வீடியோ சாட் சில விசேச தருணங்களுக்கும் பயன்படுகிறது என சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

சிலமாதங்களுக்கு முன்னால் அமேரிக்கா சிப்பாய் தனது குழந்தை பிறப்பதை பார்ப்பதற்காக ஸ்கெய்ப் (skype) வீடியோ சாட் பயன்படுத்தியுள்ளார். ஆம், அமேரிக்க ராணுவத்தில் பணியாற்றிவரும் சிப்பாய் ஒருவர் ஈராக் போரிற்காக அந்நாட்டிலிருந்த போது பிரசவத்திற்க்கு தயாரகிக்கொண்டிருந்த அவரது கருவுற்றிருந்த மனைவி தனது குழந்தை பிறப்பை தன் கணவர் நேரில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் கணவர் உடனே நாடு திரும்ப இயலாத சுழ்நிலையில், ஸ்கெய்ப் வீடியோ சாட்டில் இதனை அரங்கேற்ற முடிவு செய்து, அவ்வாறே நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை WGN-Tv தனது செய்தியில் தொகுத்து வழங்கியது. இந்த வீடியோ இரண்டு பகுதிகளாக உள்ளது.

முதல் வீடியோவில் பிரசவத்திற்க்கு தயாராக இருந்த மனைவி ஈராக்கில் இருக்கும் தனது சிப்பாய் கணவருடன் ஸ்கெய்ப் வீடியோ சாட்டில் தொடர்ப்பு கொண்டு, பின் ஆப்ரேசன் தியேட்டருக்குள் நுழைவது முதல், குழந்தை பிறந்து கணவர் மனைவி இருவரும் மகிழ்ச்சி அலையில் திகைக்கும் வரையிலான காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்க்கு நடுவில் கணவன் மற்றும் மனைவியின் உரையாடல் காட்சிகள் ஹாலிவுட் படத்தில் வருவது போன்று உள்ளது.

இரண்டாவது வீடியோவில் ஈராக்கிலிருந்து திரும்பிய கணவர் தனது மனைவி மற்றும் மகனை காண வருவது. மேலும் குறிப்பிட்ட கணவன் மற்றும் மனைவியின் எண்ணங்களை விளக்குவதாக அமைகிறது. மிகவும் அருமை.

ஆபரணத்தின் ஆதிக்கம்

  காட்டு விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த கற்காலம் அது. நம் மூதாதையர் புலிப்பல், யானைத் தந்தம் போன்றவற்றை மிருகங்களின் நரம்புகளாகிய நான்களில் கோர்த்து கழுத்து, இடுப்பு, கைகளில் அணித்திருந்தார்கள். காலச்சுழற்சியில் பருத்தி, பஞ்சு, நூல் என்று நாகரிகம் கிளைகளைப் பரப்பியபோது நரம்புகளுக்குப் பதில் மனம் லயித்த அவர்கள், அவற்றில் துளையிட்டு கோர்த்து அணியும் நிலைக்கு முன்னேறினர்.

நூல் என்பதைக் குறிக்க "இழை" என்னும் இன்னொரு தமிழ்ச்சொல்லும் இருந்ததால், அந்நூலில் கோர்த்து அணிந்த அணிகளுக்கு "இழை" என்று பெயரிட்டனர். காலப்போக்கில் தங்கம், வெள்ளி போன்ற உலோங்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் அவற்றை உருக்கி இழுத்த கம்பிகளில் மணி, பவளம், போன்றவற்றை கோர்த்து செய்யப்பட்ட போதிலும் அந்த ஆபரணங்களுக்கும் ‘இழை’ என்னும் பழைய பெயரே நிலைத்து விட்டது.

ஆயிழை ஆய-இழை ஆராய்ந்து செய்த ஆபரணம். அணியிழை ஆராய்ந்து செய்யப்பட்ட அழகிய ஆபரணம் என்பன போன்ற இலக்கிய வழக்கு சொற்கள் இதனை உறுதி செய்கின்றன. இதே முறையில் முறுக்கிய கயிறு என்னும் பொருள் தரும் ‘வடம்’ என்னும் தமிழ்ச் சொல், பழங்காலத்தில் கயிற்றில் உருவான ஆபரணங்களைக் குறித்து நின்றது. இன்று பொற்கம்பிகள் முறுக்கி செய்த ஒருவகை அணிகலனுக்கு ‘வடம்’ என்னும் அந்த பழம் பெயர் வழங்குவதை அறிவோம்.

அடையாளத்திற்காக தோன்றிய அணிகள் அக்கால மக்கள் செயற்கரிய ஒரு செயலை செய்து முடிக்க உறுதி பூணுங்கால், அதன் நினைப்பு எப்போது தமக்கிருக்க வேண்டும் என்ற குறிக்கோளில் தம் முன்னங்கைகளில் "கங்கணம்" என்னும் ஒரு வகை வளையத்தை அணிந்தனர். அந்த கங்கணத்தின் மறு வார்ப்பு தான் பின்னால் உருவான காப்பு, கடகம், வளையல், வங்கி போன்ற கையணிகள்.

.இன்று எல்லோருமே அணியும் மோதிரத்தின் முன்னோடிதான் பழைய கணையாழி. அன்றைய அரச குடும்பத்தாரும், அரச கட்டளையை நிறைவேற்றும் அமைச்சர், தளபதி, தூதர், ஒற்றர் போன்ற பொறுப்பான பதவியினரும் மட்டுமே கணையாழி அணிவர். ஆழி என்பதற்கு ‘சக்கரம்’ என்று அர்த்தம். கண்ணபிரானது சக்கராயுதம் போல அரசனின் ஆணை சக்கரம் அவனது ஆட்சி எல்லைக்குள் விரைந்து பாயும் என்பதால், மன்னனின் ஆணையை செயல்படுத்தும் அதிகாரிகள் இன்றைய அடையாள அட்டைகள் போல அவற்றைப் பயன்படுத்தினர்.

பின்னாளில் விரலுக்கு அழகு சேர்க்க விரும்பிய எல்லோருமே அணியத் தொடங்கியதும் அது மோதிரமாகி விட்டது.

அங்கமெல்லாம் தங்கமாக மின்னவேண்டும் என்ற ஆபரண மோகம் சங்க காலத்திலேயே மங்கையர் மனத்தில் புகுந்துவிட்டது போலும். கால் விரலில் அணியும் மெட்டி முதல் சுருங்கூந்தல் வகிட்டில் தொங்கும் நெற்றிச்சுட்டி வரை என்று பாவலர்கள் அணிகளின் பெயரால் ஐம்பெருங்காப்பியங்களை ஆக்கித்தரும் அளவுக்கு அன்றே நகை மோகம் இருந்திருக்கிறது.

அயல் நாடுகளில் அந்நிய செலாவணிக்கே பயன்படும் தங்கம் ஆடம்பர சின்னங்களாய் நம்மவர்கள் அங்கங்களில் அடைந்து கிடக்கின்றன. ‘நான் விரும்புவதெல்லாம் அணிகலன் ஆடம்பரமின்றி அசோக வனத்தில் இருந்த சீதையைத்தான் என்ற அண்ணல் காந்தியின் ஆதங்கத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்.

இன்றைய நவநாகரீக அணிமணிகலனுக்கு நமது கோவலிpலுள்ள சிலைக்கு அணிவிக்கப்பட்ட நகைகளின் மறுபதிப்பு கூட கூறலாம். இவ்வாறு நகையின் மோகம் வளர்ந்துள்ளது என்றால் மிகையில்லை.

ஒரு மணித்தியாலயத்தினுள் காசநோயினை கண்டறியும் பரிசோதனை

 ஒருவருடைய உடலில் காசநோயினை உண்டாக்கக் கூடிய கிருமிகள் இருக்கின்றதா? என்பதனை ஒரு மணித்தியாலத்தினுள் கண்டறிவதற்கான பரிசோதனை ஒன்றினை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுவரை காலமும் காசநோய்க் கிருமிகளைக் கண்டறிய 8 கிழமைகள் தேவைப்பட்டது. ஆனால் தற்போது துரிதமாகக் கண்டறியலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனை ஹெல்த் புரடக்ஷ்ன் ஏஜன்ஸி என்ற விஞ்ஞான அமைப்பில் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். காச நோயினை உண்டு பண்ணக் கூடிய எந்த கிருமியானாலும் இந்தப் பரிசோதனையிலிருந்து தப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

காசநோய்க் கிருமிகள் தாக்குவோரில் 10 சதவீதமானோருக்குத் தான் மரணம் சம்பவிக்கும் ஆனாலும் ஆண்டொன்றிற்கு 10 லட்சம் காசநோயாளிகள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2008ஆம் ஆண்டில் 13 இலட்சம் மக்கள் காசநோய்க்கு பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் கூட அதிகளவிலானோர் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்த நவீன பரிசோதனை மூலம் தெரிவிக்கப்படுகின்றது. 
..

முடிவின்றித் தொடரும் பணிப்பெண்களின் அவலம்

  சவூதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘நரகம்' என்பதுதான் பொருத்தமாக இருக்கும். வேலை நேரம் ஒழிவு நேரம் என்று தனித்தனியாக கொள்வதற்கு இடமிருப்பதில்லை. இடையில் கிடைத்தால் சில நிமிடங்களை ஓய்வாகக் கொள்ளவேண்டியதுதான். இதில் நேர்ந்து விடும் தவறுகளுக்காக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். வீடுகளில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையின் சிரமங்கள் அவர்களை ஓர் இயந்திரத்தைப் போல் உணரவைக்கிறது என்றால், நிலவும் சூழல் அவர்களை இயந்திரமாகவே ஆக்கும். வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை, குப்பைகளை கொட்டுவதற்குச் சென்றால்கூட அனுமதியின்றி செல்லமுடியாது.

தனியாக தெலைபேசி வைத்துக் கொள்வதற்கோ, யாருடனும் தொலைபேசியில் பேசுவதற்கோ முடியாது. இப்படி ஓய்வின்றி வேலை செய்வதாலும், தங்களின் மனக் குறைகளை பகிர்ந்துகொள்ள வழியின்றி கூண்டுக்குள் அடைபட்ட விலங்கைப் போன்ற சூழலாலும் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள். பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதில் சவூதியில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களின் நிலையை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. தனியாக மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கு சொல்வதற்கும் யாருமின்றி, செல்வதற்கும் வழியுமின்றி அந்த பாலியல் வதைகளை சகித்துக் கொள்வதைத் தவிர வேறு கதியில்லை. அண்மையில் விமான நிலையத்தில் 40 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த ஒரு பணிப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவர் கூறியதைக் கேட்டால் பணிப்பெண்கள் எத்தகைய நிலையில் அங்கு பணிபுரிய வேண்டியதிருக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். “பிறந்ததிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை, கொஞ்சம் விபரம் தெரிந்ததும் என் மார்பிலேயே கைவைக்கிறான்” என்று கூறி முடித்த போது அவர் கண்களிலிருந்து அவருக்குக் வழிந்தது. 

பணிப்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எங்களிடம் தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறது காவல்துறை. ஆனால் புகார் கொடுக்கும் அளவுக்கான சூழலை ஏற்படுத்தாமல், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்பது எந்த விதத்தில் சரியானது? முன்னிலும் அதிக சித்திரவதைகளுடனும், நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளுடனும் வேலை செய்ய முடியுமா? புகார் கொடுத்து நிரூபிக்க முடியாத நிலையிலுள்ள பணிப்பெண்களை வேறு இடத்திலோ, வேறு வேலையிலோ சேர்த்துவிட காவல்துறைமுயலாது. ஏனென்றால் சட்டத்தில் அதற்கு அனுமதியில்லை. பாலியல் கொடுமைகளைச் செய்வது ஆண்கள்தான், வீட்டிலுள்ள பெண்களிடம் அவர்கள் முறையிடலாமே என நினைப்பதும் கொடுமையான அனுபவமாகவே அமையும். அதன்பிறகு பழிவாங்கும் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதோடு பொருளாதார ரீதியிலும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

இவ்வாறு தொடரும் நரகவாழ்க்கையை எமது நாட்டுப் பணிப்பெண்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். எனினும் இதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

இனிமேலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மகளிர் சமுதாயம் பாதுகாக்கப்படாவிடின் அவர்களின் எதிர்காலம் இருள்நிறைந்ததாகவே காணப்படும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

புதுப் பொலிவுடன் யாஹூ மெயில் சேவை

பல நவீன வசதிகள் கொண்டதாகவும் புதிய தோற்றத்துடனும் தனது மெயில் சேவையை யாஹூ வெளியிடவுள்ளது.

மிக வேகமான சேவை, புதிய கண்கவர் தோற்றம், குறைந்தளவிலான ஸ்பாம் என்பவவையே முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

தனது பாவனையாளர்கள் வேகமாக குறைந்து வருவதே இதற்கான முக்கிய காரணமாகும்.

யாஹூ மெயில் சேவையானது ஐ பேட் மற்றும் அண்ரோயிட் ஆகியவற்றிற்கு ஏதுவான யூசர் இன்டர் பேஸினை உருவாக்கிவருகின்றது.

அப்பிளின் ஐஓஎஸ் மற்றும் அன்ரோயிட் இயக்குதளங்களில் வேகமாக இயங்குவதற்காக யாஹூ மெயிலானது முற்றிலுமாக எச்டிஎம்எல் 5 இன்டர் பேஸிற்கு நகரவுள்ளது.

டுவிட்டர் மற்றும் பேஸ்புக் என்பனவற்றுடன் யாஹூ இணைந்து மிகச் சுலபமாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலும் தனது தேடல் பொறியையும் யாஹூ மேம்படுத்தவுள்ளது.

பாவனையாளர்கள் இதன் மூலமாக அதிகமான தகவல்கள் சிறப்பான புகைப்படங்கள் வீடியோக்கள் என்பனவற்றையும் பெறக்கூடியதாகவிருக்கும்.

ஆழ்கடலில் உருவாகும் அவதார் அடுத்த‌ பாகம்

  உலகத் திரைப்பட வரலாற்றில் புதிய சாதனை படைத்த அவதார் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தனது அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார். இந்தப் படம் அவதாரின் தொடர்ச்சியாக இருக்கும். இதற்காக அவர் கடலின் மிகவும் ஆழமான பகுதிக்குச் செல்லவுள்ளார்.

இயக்கத்தில் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கும் அவர் படப்பிடி்ப்பு நடத்தவிருக்கும் இடம் ஆழ் கடல் ஆகும். இதற்காக பல கோடி ரூபாய் செலவில் அதி நவீன நீர் மூழகிக் கப்பல் ஒன்றை வாங்குகிறார். இந்த கப்பல் ஆஸ்திரேலியாவில் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இது கடலுக்கு அடியில் 10, 972 மீட்டர் சென்று மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழியின் அடிவாரத்திற்குச் செல்லவிருக்கிறது.

இது குறித்து கேமரூன் கூறியதாவது,

கடலுக்குள் செல்ல கப்பல் ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் கப்பல் கட்டும் வேலை பாதி முடிவடைந்துவிட்டது என்று அவர் கூறினார்.

இரு இருக்கைகள், வெப்பமூட்டும் கருவி, 3 டி கேமரா ஆகியவை அந்த கப்பலில் இருக்கும்.

கேமரூனுக்கு ஆழ்கடலுக்குச் செல்லும் ஆசை பல வருடங்களாக உள்ளது. இந்த ஆண்டே தனது கடல் பயணத்தை மேற்கொள்கிறார். அவரின் இந்த முயற்சி வெற்றி அடைந்தால் மரியானா அகழிக்குச் செல்லும் இரண்டாவது அணி இவர்கள் தான்.

1960-ம் ஆண்டு விஞ்ஞானி ஒருவரும், கடற்படை லெப்டினன்ட் ஒருவரும் மரியானா அகழிக்குச் சென்றனர். கடல் அடிமட்டத்தை நெருங்க அவர்களுக்கு 5 மணி நேரம் ஆனது. அவர்கள் அங்கு 20 நிமிடங்கள் தான் இருந்தனர்.

கேமரூனின் இந்த முயற்சி மூலம் மக்களுக்கு இன்னொரு புதிய அனுபவம் கிடைக்கவுள்ளது.
 


மட்டு. கரடியனாறு வெடி விபத்துக்கு ஜனாதிபதி மஹிந்த கண்டனம் - 16 பொலிஸாரும், 7 பொது மக்களும் பலி


மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு நியூயோர்க்கில் இருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வில் கலந்து கொள்ளும் நோக்கில் அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இது தொடர்பில் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தற்காலிக பாதுகாப்பு செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு இது தொடர்பிலான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், 25 பேர் பலியாகினர். 16 பொலிஸாரும், ஏழு பொது மக்களும் பலியானதுடன், 2 சீனப் பிரஜைகளும் பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியிருந்த செய்திகளை இராணுவத்தினரும் பொலிஸாரும் நிராகரித்துள்ளனர்.

கல்வெடி மருந்துகளை ஏற்றிய மூன்று கொள்கலன்கள் (கன்டெய்னர்கள்) அடுத்தடுத்து வெடித்ததைத் தொடர்ந்து இந்த விபத்து ஏற்பட்டதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

இந்த டைனமைட்டுகள் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகத் தெரிகிறது. புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததையடுத்து நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீனா பல இரகசிய இராணுவ தளங்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தப் பகுதிகளில் சீனர்களின் நடமாட்டம் மிகவும் அதிகமாகவே உள்ளது. இவர்கள் வீதிகள், பாலங்கள், அணைகள் கட்டவே வந்துள்ளதாக இலங்கை கூறுகிறது.

இந்நிலையில் இந்தப் பகுதியில் வீதி அமைக்கும் பணியில் சீன அரசுக்குச் சொந்தமான சைனா ஓவர்சீஸ் ஹோட்டிங்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்காக கொண்டு வரப்பட்ட டைனமைட்டுகள் வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும் இலங்கை கூறியுள்ளது.

இது ஒரு விபத்து தான் என்றும், இதில் சதி ஏதும் இல்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் கரடியனாறு பொலிஸ் நிலையம் தரைமட்டமாகிவிட்டது. அதிலிருந்த பெரும்பாலான பொலிஸார் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் பலியானோர் எண்ணிக்கையும் 70 வரை இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சம்பவம் நடந்த இடம் முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தையடுத்து கரடியனாறு பகுதிக்கு கொழும்பில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

இது தொடர்பிலான முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பில் இருந்து இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.




1800 ஆண்டுக்கு முன் கொல்லப்பட்ட குழந்தையின் எலும்புகூடு கண்டுபிடிப்பு

  இங்கிலாந்தில் வின்டோ லாண்யா ரோமன் கோட்டை பகுதியில் போர் வீரர்கள் அறையின் மூலையில் தோண்டி அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஒரு குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது.

இதன் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. மண்டை ஓட்டில் அடிபட்டு இருந்தது. இந்த எலும்பு கூட்டை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இது ஒரு பெண் குழந்தையின் எலும்பு கூடு என்றும், இவள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது.

1800 ஆண்டுகளுக்கு முன்பு இது நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் அப்போது இங்கிலாந்தை ஆண்டை ரோமானியர்கள் மனிதர்களை புதைத்த இடங்களில் கோட்டைகள் மற்றும் நகரங்களை அமைத்ததாக கூறப்படுகிறது. 

கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்

 கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்வதாக பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதால் கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பெண்களைத் தாக்கும் என்று பரவலான எண்ணம் உள்ளது. ஆனால் பிரிட்டனிலுள்ள ரோயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிசிஷியன்ஸ் நடத்திய ஆய்வில் கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவதால் அதிக நாட்கள் பெண்களால் உயிர்வாழ முடியும் என்பது தெரியவந்துள்ளது.

இந்த கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் பிலிப் ஹானஃபோர்ட் இதுகுறித்து கூறியதாவது: 40 ஆண்டுகளுக்கும் மேலாக 46 ஆயிரம் பிரிட்டன் பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினோம். கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினால் பெண்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என்பது இதிலிருந்து தெரியவந்துள்ளது.

இவற்றைச் சாப்பிடுவதால் கர்ப்பப்பை புற்றுநோய், இதய சம்பந்தமான நோய்கள் பெண்களைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் குறைந்த வயதுடைய பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும்போது அவர்களுக்கு மாரடைப்பு, மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

இளம்பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டு சில ஆண்டுகள் கழித்து நிறுத்தி விடுகின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் மாத்திரைகளால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் அவர்களது உடலிலிருந்து மறைந்துவிடும். மேலும் சீரான இடைவெளிகளில் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனைகள், சுகாதாரமான வாழ்க்கை போன்றவற்றை கடைப்பிடிக்கும்போது கருத்தடை மாத்திரைகளால் பெண்களின் உடலுக்கு வரும் பாதிப்பு குறைக்கப்படுகிறது என்பதே உண்மை.

உதாரணமாக ஒரு லட்சம் பெண்கள் ஓராண்டுக்கு கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுவதாக வைத்துக் கொண்டால் இவர்களில் 52 பேர் மட்டுமே நீண்ட நாள் உயிர் வாழ்வதில்லை. மற்றவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர். அதே நேரத்தில் பழைய வகை கருத்தடை மாத்திரைகள் மட்டுமே பெண்களுக்கு பலன் அளிப்பதாக உள்ளது. அதாவது பழைய வகை கருத்தடை மாத்திரைகள் சாப்பிடும் அவர்கள் நீண்ட நாள் உயிர்வாழ்கின்றனர். அவர்களுக்கு மாரடைப்பு, புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. ஆனால் புதிய வகை கருத்தடை மாத்திரைகள், பழைய வகை கருத்தடை மாத்திரைகளின் பார்முலாவிலிருந்து சற்றே வேறுபடுகின்றன. இதில் இடர்ப்பாடுகள் (ரிஸ்க்) அதிகம்.

இந்த ஆய்வை 1968ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம். 23 ஆயிரம் பெண்கள் தொடர்ந்து 4 ஆண்டுகள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்களில் 1,400 பேர் எந்தவித நோய்க்காகவும் மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதில்லை என்பது தெரியவந்தது. இந்த மாத்திரைகளை சாப்பிடும் பெண்கள் இதயப் பிரச்னை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவர் என்று முதலில் சிலர் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது நடத்தி முடிக்கப்பட்ட ஆய்வில் கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் 30 வயதுக்குள்பட்ட 1 லட்சம் பெண்களில் 20 பேர் மட்டுமே இறக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதேபோல 30 முதல் 39 வயதுக்குள்பட்ட 1 லட்சம் பெண்களில் 4 பேர் மட்டுமே இறக்கின்றனர். 40 முதல் 49 வயதுக்குள்பட்ட பெண்களில் 14 பேர் மட்டுமே இறக்கின்றனர். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கருத்தடை மாத்திரைகளை சாப்பிடும்போது அதிக கவனத்துடன் இருந்தால் இதய நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து தப்பிக்க முடியும். ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுதல், சுகாதாரமான உணவு, அளவான உணவு, தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றால் இந்த பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும் என்றார் அவர். பேராசிரியர் ஹானஃபோர்ட் நடத்திய ஆய்வு முடிவுகள் பிரிட்டிஷ் மருத்துவப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.