Friday, September 17, 2010

மட்டு. கரடியனாறு வெடி விபத்துக்கு ஜனாதிபதி மஹிந்த கண்டனம் - 16 பொலிஸாரும், 7 பொது மக்களும் பலி


மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு நியூயோர்க்கில் இருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வில் கலந்து கொள்ளும் நோக்கில் அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இது தொடர்பில் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தற்காலிக பாதுகாப்பு செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு இது தொடர்பிலான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், 25 பேர் பலியாகினர். 16 பொலிஸாரும், ஏழு பொது மக்களும் பலியானதுடன், 2 சீனப் பிரஜைகளும் பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியிருந்த செய்திகளை இராணுவத்தினரும் பொலிஸாரும் நிராகரித்துள்ளனர்.

கல்வெடி மருந்துகளை ஏற்றிய மூன்று கொள்கலன்கள் (கன்டெய்னர்கள்) அடுத்தடுத்து வெடித்ததைத் தொடர்ந்து இந்த விபத்து ஏற்பட்டதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

இந்த டைனமைட்டுகள் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகத் தெரிகிறது. புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததையடுத்து நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீனா பல இரகசிய இராணுவ தளங்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தப் பகுதிகளில் சீனர்களின் நடமாட்டம் மிகவும் அதிகமாகவே உள்ளது. இவர்கள் வீதிகள், பாலங்கள், அணைகள் கட்டவே வந்துள்ளதாக இலங்கை கூறுகிறது.

இந்நிலையில் இந்தப் பகுதியில் வீதி அமைக்கும் பணியில் சீன அரசுக்குச் சொந்தமான சைனா ஓவர்சீஸ் ஹோட்டிங்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்காக கொண்டு வரப்பட்ட டைனமைட்டுகள் வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும் இலங்கை கூறியுள்ளது.

இது ஒரு விபத்து தான் என்றும், இதில் சதி ஏதும் இல்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் கரடியனாறு பொலிஸ் நிலையம் தரைமட்டமாகிவிட்டது. அதிலிருந்த பெரும்பாலான பொலிஸார் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் பலியானோர் எண்ணிக்கையும் 70 வரை இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சம்பவம் நடந்த இடம் முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தையடுத்து கரடியனாறு பகுதிக்கு கொழும்பில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

இது தொடர்பிலான முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பில் இருந்து இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.




No comments:

Post a Comment