Saturday, September 18, 2010

முதல் பார்வையிலே காதல் வருமா?

பார்த்தவுடன் காதல் பற்றிக் கொண்டதாக பலரும் கூறுகிறார்கள். இப்படி முதல்பார்வையிலேயே காதல் வந்துவிடுமா? அப்படி வந்தால் அது காதல்தானா?
ஒருவரது தோற்றம்தான் நம்மை முதலில் ஈர்க்கும். ஏனெனில் நமது பார்வைக்கு முதலில் தோன்றுவது அவரது உருவம்தான். அவரது அழகு, நடை, உடை, பாவனைகள் இவற்றைத்தான் நாம் முதலில் பார்க்கிறோம். அது பிடித்திருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நம்மை ஈர்த்து விடுவார்.
அப்படி பிடித்து போய்விட்டால் உங்கள் பார்வை அவரைத் துரத்துவதுபோல ஆர்வத்தோடு பார்க்கும். குளுமை வீசி கவர்ந்திழுக்க முயற்சிக்கும். இந்த பார்வையை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் உங்களை பற்றிய ஒரு அபிப்பிராயம் எழுவதும் இயல்பே. அதை அவர் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உங்களது காதல் அரும்புவதும், கருகுவதும் இருக்கிறது.
பார்வையில் பலவிதம் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் பார்வைக்கும், அவர் பார்க்கும் பார்வைக்கும் பொருள் என்ன என்பதை புரிந்து கொள்வதில் தான் காதலின் வெற்றி இருக்கிறது. ஒருவரை மீண்டும் மீண்டும் ஆவலோடு பார்க்கிறோம் என்றால் அது காதல், காமம், அன்பு எதுவாகவும் இருக்கலாம்.
முதல் பார்வையில் உங்களுக்குள் ஆர்வம் வந்துவிட்டாலும் அது காதலா, இல்லையா என்பதை அறிய சில காலம் பிடிக்கும். காதலில் நேரத்தை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. தொடர்ந்து காட்டும் நேச பார்வையும், அன்பு புன்னகையும், கனிவான நடவடிக்கைகளும் நீங்கள் விரும்புபவருக்கு உங்கள் மீது காதலை மலரச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்படி பார்வையில் பல நாட்கள் கடந்தாலும் சிலருக்கு `காதல் இதுதானா? நாம் காதலில் விழுந்துவிட்டோமா’ என்பது தெரிவதில்லை. அதைக் கண்டுபிடிக்கவும் வழி உண்டு.
உங்கள் நடவடிக்கையில் முன்பைவிட மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உணர முடிகிறதா? ஒரு செயலைச் செய்யும்போது அம்மா, அப்பா உள்பட அருகில் இருப்பவர்கள் தலையில் தட்டி `உனக்கு என்ன ஆச்சு, ஒழுங்கா வேலைய பாரு’ என்று சொல்லித் தெரியவேண்டிய அளவில் உங்கள் கவனம் சிதறுகிறதா? அப்படியானால் அந்த நேரத்தில் உங்கள் சிந்தனையை யார் ஆக்கிரமித்திருக்கிறாரோ அவர் மீது உங்களுக்கு விருப்பம் வந்துவிட்டது என்று பொருள். அவரது பார்வைதான் உங்களுக்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் உண்மை.
காதல் தவறென்றும், அதை ஒரு பலவீனமான எண்ணமாக கருதுபவர்களும் உண்டு. அவர்கள் பெற்றோரின் தீவிர கண்காணிப்பில் வளர்ந்தவர் களாகவும், பாச உணர்ச்சி அதிகம் கொண்டவர் களாகவும் இருப்பார்கள்.
“மிகுந்த பாசம் காட்டி வளர்க்கபடுபவர்களே எளிதில் காதலில் விழுவார்கள்” என்பார் உளவியலின் தந்தை பிராய்டு. இப்படிபட்டவர்கள் தான் முதல்பார்வையில் தங்களுக்குள் காதலை அரும்ப விட்டுவிட்டு, அப்பா கண்டிபாரோ, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்குமோ, காதலிப்போமா, வேண்டாமா? என்று குழப்பிக் கொண்டிருபார்கள்.
இவர்களுக்கு தன்னை விரும்புபவர் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தாலும், கண்டும் காணாமலும் இருக்க முயல்வார்கள். அவர் தன் அருகில் இருந்து நீங்கியதும் அவரைத் தேடி விழிகளை அலைபாய விடுவார்கள். தங்களுக்குள் தாமே `கண்ணாமூச்சி’ ஆடிக்கொள்வதுபோல் இருக்கும், இவர்களது நினைப்பும், நடத்தையும்…
எது, எப்படியோ முதல் பார்வையில் காதலில் விழுந்தவர்கள் ஏராளம். அது சரியா? தவறா? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மற்றவர்களுக்கோ சரியென்றால் சரி, இல்லையென்றால் இல்லை.

ரோபோடிக் துறையில் புதிய புரட்சி: இலத்திரனியல் தோல்

தொடுகையை உணரக்கூடிய இலத்திரனியல் தோலினை கலிபோர்னிய பேர்கலி பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானிகள் குழுவொன்று உருவாக்கியுள்ளது.
மேற்படி இலத்திரனியல் தோலானது எந்திரனியல் (ரோபோடிக்) மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் புதிய அத்தியாயமொன்றை உருவாக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஆய்வுகூட பரிசோதனை அளவிலேயே இருக்கும் மேற்படி தோலானது, மனித தோலைப் போன்று மிக வேகமாக தொடுகைகளை உணர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமுக்கத்தை உணரக் கூடிய உயர் உணர்திறனை கொண்டமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இலத்திரனியல் தோலானது சிலிக்கோன், நெனோ வயர்கள் மற்றும் ஜேர்மானியம் என்பவற்றால் ஆக்கப்பட்டுள்ளது.
மேலும் நெனோ ஸ்கேல் ட்ரான்ஸ்சிஸ்டர் மற்றும் இலகுவான இறப்பர் என்பனவும் இதில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை மிகவும் மலிவாக உருவாக்க முடியுமெனவும், இதன் இயக்கத்திற்கு மிகக் குறைந்த அளவிலான மின்சக்தியே ( வோல்டேஜ்) தேவையெனவும் கருதப்படுகின்றது.
எதிர்காலத்தில் இரசாயனப் பொருட்கள் மற்றும், வெப்பம், ரேடியோக் கதிர்கள் என்பனவற்றுக்குத் துலங்களைக் காட்டக்கூடிய சென்ஸர்களை மேற்படி தோலில் உள்ளடக்க தாம் எதிர்ப்பார்ப்பதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எதிர்காலத்தில் மனிதர்கள் உள் நுழைய முடியாத இடங்களில் கூட இலத்திரனியல் தோல் கொண்ட ரோபோக்களைக் கொண்டு தாம் நுழைய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருணை அடிப்படையில் தற்கொலைக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது

கருணை அடிப்படையில் தற்கொலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் புதிய சட்டங்கள் இயற்றப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
கருணை அடிப்படையில் தற்கொலைகளுக்கு உதவி வழங்கும் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் கடமைகளும் இந்த சட்டத்தில் நிர்ணயிக்கப்படவுள்ளது.
கருணை அடிப்படையில் தற்கொலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் ஒரே சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான சட்ட வரைவுத் திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருணை அடிப்படையில் தற்கொலைகளுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் கடுயைமான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது.
அநேகமானவர்கள் இந்த சட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருணை அடிப்படையில் தற்கொலைகளுக்கு உதவிகளை வழங்குதல் சுவிட்சர்லாந்தில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிகளவு வெளிநாட்டு வயோதிபர்கள் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

போலீஸ் வருவதை காட்டி கொடுத்தது: போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி

நியூயார்க்,அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் போதை மருந்து கடத்தல் அதிக அளவில் உள்ளது. எனவே, அந்த கும்பலை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக உள்ளது. பாரன்குயில்லா நகரில் ஒரு பங்களாவில் போதை மருந்து கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

உடனே சுமார் 300 போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு திடீரென ஒரு கிளி பறந்து வந்தது. வந்த வேகத்தில் ஓடு... ஓடு.... உன்னை பிடிக்க பூனை வருகிறது என கொஞ்சி கொஞ்சி பேசியது இதை கேட்ட போதை மருந்து கடத்தல் கும்பல் அங்கிருந்து தலை தெறிக்க தப்பி ஓடிவிட்டது.

இருந்தும் அவர்களில் சிலரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் வருவதை காட்டிக் கொடுக்க கிளியை வளர்த்து வருவதாகவும் அதற்கு “லொரன்ஸ்ஷோ” என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே, அந்த கிளியையும் போலீசார் பிடித்தனர். அந்த கிளி விலங்குகள் நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச் சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கோட்டையில் வானில் தோன்றியது என்ன?

கடந்த வியாழக்கிழமை மாலை கோட்டைப் பகுதியில் வான்பரப்பில் அடையாளந்தெரியாத பொருளொன்று தோன்றியுள்ளது. பிரகாஷமான செம்மஞ்சள் நிறத்தில் முட்டை வடிவில் தோன்றிய இது வட கிழக்கு வானிலிருந்து தென்கிழக்கை நோக்கி மிக வேகமாகச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்துள்ளது. அன்று மாலை 6.10 மணியளவில் இவ்விசித்திர உருவம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த பெரும்பாலானவர்கள் இதைக் கண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் காணப்படும் புகைப்படம் அப்பகுதியில் இருந்த ஊடகவியலாளர் ஒருவரால் டிஜிட்டல் கமரா மூலம் படம் பிடிக்கப்பட்டதாகும்.