நூல் என்பதைக் குறிக்க "இழை" என்னும் இன்னொரு தமிழ்ச்சொல்லும் இருந்ததால், அந்நூலில் கோர்த்து அணிந்த அணிகளுக்கு "இழை" என்று பெயரிட்டனர். காலப்போக்கில் தங்கம், வெள்ளி போன்ற உலோங்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் அவற்றை உருக்கி இழுத்த கம்பிகளில் மணி, பவளம், போன்றவற்றை கோர்த்து செய்யப்பட்ட போதிலும் அந்த ஆபரணங்களுக்கும் ‘இழை’ என்னும் பழைய பெயரே நிலைத்து விட்டது.
ஆயிழை ஆய-இழை ஆராய்ந்து செய்த ஆபரணம். அணியிழை ஆராய்ந்து செய்யப்பட்ட அழகிய ஆபரணம் என்பன போன்ற இலக்கிய வழக்கு சொற்கள் இதனை உறுதி செய்கின்றன. இதே முறையில் முறுக்கிய கயிறு என்னும் பொருள் தரும் ‘வடம்’ என்னும் தமிழ்ச் சொல், பழங்காலத்தில் கயிற்றில் உருவான ஆபரணங்களைக் குறித்து நின்றது. இன்று பொற்கம்பிகள் முறுக்கி செய்த ஒருவகை அணிகலனுக்கு ‘வடம்’ என்னும் அந்த பழம் பெயர் வழங்குவதை அறிவோம்.
அடையாளத்திற்காக தோன்றிய அணிகள் அக்கால மக்கள் செயற்கரிய ஒரு செயலை செய்து முடிக்க உறுதி பூணுங்கால், அதன் நினைப்பு எப்போது தமக்கிருக்க வேண்டும் என்ற குறிக்கோளில் தம் முன்னங்கைகளில் "கங்கணம்" என்னும் ஒரு வகை வளையத்தை அணிந்தனர். அந்த கங்கணத்தின் மறு வார்ப்பு தான் பின்னால் உருவான காப்பு, கடகம், வளையல், வங்கி போன்ற கையணிகள்.
.இன்று எல்லோருமே அணியும் மோதிரத்தின் முன்னோடிதான் பழைய கணையாழி. அன்றைய அரச குடும்பத்தாரும், அரச கட்டளையை நிறைவேற்றும் அமைச்சர், தளபதி, தூதர், ஒற்றர் போன்ற பொறுப்பான பதவியினரும் மட்டுமே கணையாழி அணிவர். ஆழி என்பதற்கு ‘சக்கரம்’ என்று அர்த்தம். கண்ணபிரானது சக்கராயுதம் போல அரசனின் ஆணை சக்கரம் அவனது ஆட்சி எல்லைக்குள் விரைந்து பாயும் என்பதால், மன்னனின் ஆணையை செயல்படுத்தும் அதிகாரிகள் இன்றைய அடையாள அட்டைகள் போல அவற்றைப் பயன்படுத்தினர்.
பின்னாளில் விரலுக்கு அழகு சேர்க்க விரும்பிய எல்லோருமே அணியத் தொடங்கியதும் அது மோதிரமாகி விட்டது.
அங்கமெல்லாம் தங்கமாக மின்னவேண்டும் என்ற ஆபரண மோகம் சங்க காலத்திலேயே மங்கையர் மனத்தில் புகுந்துவிட்டது போலும். கால் விரலில் அணியும் மெட்டி முதல் சுருங்கூந்தல் வகிட்டில் தொங்கும் நெற்றிச்சுட்டி வரை என்று பாவலர்கள் அணிகளின் பெயரால் ஐம்பெருங்காப்பியங்களை ஆக்கித்தரும் அளவுக்கு அன்றே நகை மோகம் இருந்திருக்கிறது.
அயல் நாடுகளில் அந்நிய செலாவணிக்கே பயன்படும் தங்கம் ஆடம்பர சின்னங்களாய் நம்மவர்கள் அங்கங்களில் அடைந்து கிடக்கின்றன. ‘நான் விரும்புவதெல்லாம் அணிகலன் ஆடம்பரமின்றி அசோக வனத்தில் இருந்த சீதையைத்தான் என்ற அண்ணல் காந்தியின் ஆதங்கத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்.
இன்றைய நவநாகரீக அணிமணிகலனுக்கு நமது கோவலிpலுள்ள சிலைக்கு அணிவிக்கப்பட்ட நகைகளின் மறுபதிப்பு கூட கூறலாம். இவ்வாறு நகையின் மோகம் வளர்ந்துள்ளது என்றால் மிகையில்லை.
No comments:
Post a Comment