Wednesday, September 15, 2010

கழிவுகளோடு கழிகிறது வாழ்க்கை (பட இணைப்பு)

  சன நடமாட்டம் அதிகமுள்ள கதிரேசன் வீதியின் ஒரு புறத்தில் வழிந்தோடிக்கொண்டிருந்த சேற்றுத் தண்ணீரில் தனது இரு கைகளாலும் மண்ணை அள்ளி கழுவிக்கொண்டிருந்தார் ஒருவர்.உழைப்பின் களைப்போடு பார்வையில் ஒரு வேகம். யாருடைய கேளி, கிண்டல்களையும் பொருட்படுத்தாது தனது வேலையில் மும்முரமாக இருந்த அவரை நெருங்கினோம்.

“எத்தனையோ பேர் இப்படித்தான் வந்து கேக்குறாங்க. ஆனாலும் என்ன பிரயோசனமுங்க” என விரக்தியுடன் எம்மை வரவேற்றார். ஜயபால என்பதுதான் அவருடைய பெயர். ஐம்பத்திரண்டு வயதாகும் அவருக்கு குடும்பம், பிள்ளைகள் என எதுவும் இல்லை. கதிரேசன் தெருவில் கால் நீட்டும் அளவுக்கு எங்கு இடம் கிடைத்தாலும் படுத்துறங்குகிறார். அதுதான் அவருக்கு சொந்தமாக வேலையொன்று செய்ய முடியாததற்கான காரணம்.

வசிப்பிடமற்றவர்களுக்கு தொழில் தர மறுக்கும் மனிதர்களுக்கிடையில் வாழவேண்டும் என்பதற்காக இந்தத் தொழில். – போன்ற தகவல்களை அவருடன் பேசியபோது அறிந்துகொண்டோம்.“செட்டியார் தெருவிலுள்ள நகைக் கடைகள்ல வேல செய்வேன். ஒவ்வொரு கடயிலயும் மலசலக் கூடங்கள கழுவனும், குப்பைகள துப்புறவு பண்ணனும். அதுக்கு 100 ரூபா செலவாகுமுங்க.

அப்படி செஞ்சு முடிச்ச பிறகு அங்க உள்ள தூசுகளை அள்ளிக்கொண்டு வருவேன். கழிவு னு சொல்லி நான் பார்க்க மாட்டேன். எல்லாத்தையும் எடுப்பேன். எச்சில், கழிவு எல்லாம் கலந்து வழிந்தோடும் தண்ணீரில் கைகளை விட்டுத் தான் அள்ளி எடுப்பேன். இது பழகிப் போயிடுச்சி.நான் வேலை செய்ற கடைகள்ல இருந்து கிட்டத்தட்ட 10 கிலோ குப்பைகளும் தூசுகளும் ஒரு நாளைக்கு சேரும்.

அத கொண்டு வந்து இந்தமாதிரி சேற்றுத் தண்ணியில கழுவுவேன். நல்லா கழுவுன பிறகு தங்கத் தூசுகள், துண்டுகள் இருக்கும். நகைக் கடையில பட்டற தீட்டுற நேரம் வார தூசுகள் தான் இது.அந்த மாதிரி கிடைக்கிற எல்லாத்தையும் சேர்த்து விற்பேன். சாதாரணமா ஒரு நாளைக்கு 600 ரூபா வரைக்கும் வருமானம் கிடைக்கும். ஒரு சில நாட்கள்ல வருமானமே இருக்காது. 2000 ரூபா வருமானம் வந்த நாளும் இருக்குது.

சுத்தமான தண்ணியில கழுவ முடியாதுங்க. மாசம் பில் கட்டணும் தானே அதனால அதுக்கு யாரும் அனுமதிக்க மாட்டாங்க. எனக்கும் வீடு வாசல் இல்ல. இந்த அசுத்தமான தண்ணியில தான் வேல செய்றேன்'. எமது முகத்தைக் கூட பார்க்காமல் தனது வேலையை செய்துகொண்டே கூறிமுடித்த ஜயபால, இன்னும் என்ன தகவல் வேண்டும் என ஏறிட்டுப் பார்த்தார். கடுமையான உழைப்பின் அறிகுறியாய் வியர்வை துளிர்த்துக்கொண்டிருந்தது.

ஜயபாலவைப் போல நிறைய பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அதிகமானோர் தாம் உழைக்கும் பணத்தை போதைக்கே செலவுசெய்துவிடுகின்றனர். ஆனால் தான் அப்படியில்லை என உறுதியாகக் கூறும் அவர் கழிவுநீரோடு தினமும் போராடுவதால் போதை அவசியம் தான் என்கிறார். அந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நாம் கூறியதும் புன்னகை மட்டுமே அவரிடத்திலிருந்து பதிலாகக் கிடைத்தது.

நாம் பேசிக்கொண்டிருந்தபோதே கழிவு நீருக்குள் இருந்த தங்கத் துகள்களை குதூகலத்துடன் எமக்குக் காட்டினார்.அந்தச் சந்தோசத்துடன் ஜெயபாலவிடமிருந்து விடைபெற்றோம்.


நாளுக்கு நாள் உலகம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகள் அதிகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அவற்யையெல்லாம் மூன்றாவது தேவை எனக் கருதும் சிலர் இப்படியும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment