Tuesday, February 15, 2011

எயார் லங்கா விமானத்தில் குண்டுப்புரளி ஏற்படுத்திய பயணி விடுதலை


இலங்கையில் இருந்து நேற்று லண்டன் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு இருப்பதாக வதந்தியை பரப்பிய குற்றச்சாட்டில் மாலைதீவில் வைத்து கைது செய்திருந்த பயணி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மாலைதீவு பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
வெடிகுண்டு புரளி கிளப்பிய பயணி  கிளமன்ட் போல்  என்பவரே நேற்று மாலைதீவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
விமான நிலைய ஊழியர் பயணியின் கருத்தினை தவறுதலாக புரிந்து கொண்டதனாலேயே விமானம் தரையிறக்கப்பட நேர்ந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் தனக்கு இடையூறு என பயணி தெரிவித்ததை தவறாக புரிந்து கொண்ட பயணி, விமானத்தில் குண்டு இருப்பதாக புரிந்து கொண்டு அதனை உயரதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து புறப்பட்டு இவ்விமானம் மாலைதீவில் தரையிறங்கியபின், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த பயணியொருவர் சக பயணிகளை எச்சரித்திருந்தார்.
அதையடுத்து மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையினரால் பயணிகள் வெளியேற்றப்பட்டு, விமானத்தில் தீவிர தேடுதல்களை மேற்கொண்ட பின்னர் இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் ஒரு புரளி எனவும் பயணியொருவரால் இது ஏற்பட்டது எனவும் என தெரியவந்தது.
மாலைதீவில் இவ்விமானம் சோதனைக்காக ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பின்னர் அது  லண்டன் நோக்கிப் புறப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து 199 பயணிகளுடன் மாலைதீவுக்கூடாக லண்டனுக்குச் செல்வதற்கு இவ்விமானம் புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment