Tuesday, February 15, 2011

விடுதலைப் புலிகள் இந்தியாவில் மூன்று இரகசிய முகாம்களில் பயிற்சி? - இலங்கைப் புலனாய்வுத்துறை


விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மூன்று இரகசிய முகாம்களை அமைத்துப் பயிற்சிகளைப் பெற்று வருவதாக இலங்கைப் புலனாய்வுத்துறையின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் தமிழ்நாட்டின் மூன்று இரகசிய முகாம்களில் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக இலங்கைப் புலனாய்வுத்துறைக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் ஒரு பயிற்சி முகாமில் முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதனுடன் இணைந்ததான செய்தியொன்றை அண்மையில் இந்தியாவின் முன்னணி நாளிதழான "த இந்து" பத்திரிகை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணைத்தல், பயிற்சியளித்தல் மற்றும் தேவையான ஏற்பாடுகளைக் கவனித்து வருபவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்களில் ஒருவரான புகழேந்தி மாஸ்டர் என்பராவார் என்றும் அத்தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
அத்துடன் இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரும் இன்னும் சிலரும் அவர்களுக்கு ஒத்தாசையாக இருப்பதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
அண்மையில் சென்னையில் பெளத்த மத்திய நிலையத்தின் மீதான தாக்குதலை மேற்கொண்டவர்களும் இந்தக் குழுவின் அங்கத்தவர்களே என்பதாகவும் விசாரணைகள் மூலம் கிடைத்த தகவல்களிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment