Wednesday, October 20, 2010

தாய்ப் பாசத்துக்கு ஈடிணை இவ்வுலகில் வேறேது?

உலகில் எவ்வித எதிர்ப்பார்ப்பும் பிரதியுபகாரங்களும் இன்றி நாம் பெறுவது தாய்ப் பாசம் ஒன்றே! இதற்கு ஈடிணை இவ்வுலகில் ஏதுமில்லை.

ஒரு பெண்ணின் விசித்திரமான தாய்ப் பாசத்தை அறிந்து கொள்ள கிடைத்த வாய்ப்புத்தான் இது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பெண் அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வெனிஸ் கடற்கரைப் பகுதி வீதியொன்றில் தனியாக சென்றுகொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறிக்கின்றார்.

அந்நபர் அவரது கைப்பையைப் பறிக்க முயல்கின்றார். பெண் கீழே விழுந்து விடுகின்றார்.

அப்பெண் கீழே விழுந்ததைக் கூட பொருட்படுத்தாமல் மிகவும் மோசமாக தாக்குகின்றார் அந்நபர். என்ன முயன்றும் இறுதி வரை கைப்பையைப் பறிக்க முடியாமல் போனதால், வெறுப்படைந்த அந்நபர் அவ்விடத்திலிருந்து ஓடிவிடுகின்றார்.

அந்நபர் பறிக்க முற்பட்ட போதும், அப்பெண் போராடியது விலையுயர்ந்த ஒரு பொருளுக்காக என்றா நினைக்கின்றீர்கள்? நிச்சயமாக இல்லை.

பெண்ணின் கைப்பையினுள் இருந்த ஒரு கைத்தொலைபேசிக்காகத் தான். அப்படியென்ன அதி உயர்ந்த கைத்தொலைபேசி அது?

அவரது இறந்த குழந்தையின் குரலைப் பதிவு செய்து வைத்திருந்த கைத்தொலைபேசித்தான் அது.

ஆம், அப்பெண்ணின் குழந்தை இச்சம்பவம் இடம்பெறுவதற்கு சுமார் 10 வாரங்களுக்கு முன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது.

இறக்கும் முன்னர் அக்குழந்தை தனது தாயை ' மமி ' என்று அழைத்ததை அவர் தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்தார்.

இதனை இழக்கத்தான் விரும்பவில்லையெனவும் அதனைவிட தான் இறப்பது மேல் என்ற எண்ணத்திலேயே அந்நபருடன் போராடியதாகவும் அந்தத் தாய் தெரிவித்திருப்பது, நெஞ்சை நெகிழ வைப்பதாக உள்ளது.

இக்காட்சியானது தெருவோர பாதுகாப்பு கெமராவினாலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்காணொளியின் உதவியுடன் பொலிஸார் சந்தேக நபரைத் தேடி வலைவிரித்துள்ளனர்.

No comments:

Post a Comment