கொழும்பு 11, புறக்கோட்டை, குமாரவீதி (பிரின்ஸ் வீதி), மிகமுக்கியமான, மிகச்சுறுசுறுப்பு மிக்க வர்த்தக ஸ்தானம். தொலைபேசியில் கூட பேச முடியாதளவுக்கு வாகனங்களின் இரைச்சல்களும், வியாபாரிகளின் கூச்சல்களும் நிறைந்த சனநெருக்கடியான ஓரிடம். இருந்தும் 95 ஆம் இலக்கக் கட்டிடத்திற்குள் நுழைந்துவிட்டால், 318 வருடங்களின் பழமை பேசும் மகிமைமிக்க, முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலை க்குள் நாம் அழைத்துச் செல்லப்பட்டு விடுகின்றோம். வெளியில் இருக்கும் இரைச்சல்களும் கூச்சல்களும் நமது காதுகளுக்கு கேட்பதில்லை. எந்தச் சுட்டெரிக்கும் வெய்யிலாக இருந்தாலும் குளுகுளு குளிர்மை இதற்குக் காரணம் இந்தக் கட்டடத்தின் கட்டுமான தொழில்நுட்பமே!
ஒல்லாந்தர் காலத்து நூதனசாலையாக இயங்கும் இக் கட்டடம் 1692 இல் கவர்னர் தோமஸ் வான்றீ என்பவரால் கட்டப்பட்டதாகும் இது கவர்னர் இல்லமாக நான்கு வருடங்கள் பயன்படுத்தப்படட்டது. 1696 இல் கவனரால் டச்சு கிழக்கிந்திய கம்பனிக்கு விற்கப்பட்ட பின் கொழும்பு செமின ரியாக இயங்கியது. 1796 இல் ஒல்லாந்தர் ஆட்சி முடிவுக்கு வரும்வரை மத போதனை இடமாகவும் அனாதைகள் விடுதி யாகவும் இவ்வில்லம் செயற்பட்டது.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இராணுவ வைத்திய சாலையாகவும், யுத்த தளபாட களஞ்சிய சாலையாகவும், பொலிஸ் பயிற்சிக் கல்லூரியாகவும், தபாற் கந்தோராகவும் இக்கட்டடம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1982 ஜூலை மாதம் ஒல்லாந்தர் காலத்து நூதனசாலையாக உத்தியோகபுபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. அரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கட்டடம், ஒருமாடியைக் கொண்டதாகும். மேல்மாடியிலேயே கவர்னரின் படுக்கை அறை இருந்திருக்கிறது. இங்கிருந்து கொழும்பு துறை முகப் பணிகளை, வந்து நிற்கும் கப்பல்களை கண்காணிக்க முடியும். (இந்தக் கட்டடம் தான் ஒல்லாந்தர் காலப்பகுதியில் கொழும்பு நகரில் மிக உயர்ந்த கட்டமாக இருந்தது.)
140 வருடகால ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் வரலாற்றுச் சான்றுகளைப் பகிரக் கூடியவாறு இங்கு சேகரிக்கப்பட்டிருக்கும் பொருட்கள், ஒல்லாந்தரின் கடற்பயண நடவடிக்கைகளையும், கண்டி மன்னர்களுடன் அவர்கள் கொண்டிருந்த நட்புறவு களையும் பறைசாற்றுகின்றன. ஆயுதங்கள், வீட்டு பாவனைப் பொருட்கள், வரைபடங்கள், சித்திரங்கள், தளபாடங்கள், ஒல்லாந்தர் ஆடைகள், சமயலறை உப கரணங்கள், கல்வெட்டுக்கள், மட்பாண்டங்கள், விளக்குகள், அலங்காரப் பொருட்கள் காணப்படுகின்றன.
ஒல்லாந்தர் கால பீரங்கி, டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நாதமணி (1768 இல் தயாரிக்கப்பட்ட இம்மணியில் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன), தண்ணீர்த் தாங்கி (கப்பல் பயணங்களின் போது இந்தத்தாங்கியில்தான் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகின்றது), கல்லறைக் கற்கள் (புறக்கோட்டையிலும் பழைய ஒல்லாந்தர் மயானங்களிலும் பெற்றுக் கொள்ளப் பட்டவை. ஒவ்வொரு கல்லிலும் மரணத்தை உணர்த்தும் சின்னம் காணப்படுகின்றது.), ஜன்னல் பூட்டு, கருங்காலி மரத்திலான ஒல்லாந்தர் காலத்து நாற்காலி, பலா மரத்திலான ஒல்லாந்தர் காலத்து அலுமாரி (கால்களில் செதுக்குவேலை வடிவங்கள் காணப்படுவது இதன் பெருமை), பலா, முதிரை மரங்களிலான மூலை நாற்காலி, கருங்காலி மரத்திலான பல்லாக்கு, பலா மரத்திலாலான ஒல்லார்தர் காலத்துக் கட்டில், இரகசிய இழுப்பறை கொணட பெட்டகம், மடக்கத்தக்க மேசை, 318 ஆண்டுகள் பழமையான மாடிப்படி உட்படப்பல பழைய பொருட்கள் இங்கு கானப்படுகின்றன.
No comments:
Post a Comment