Tuesday, September 21, 2010

ஆஸி. வில்வூட் நகரில் இலங்கைத் தமிழர்கள் கூரை மீதேறி நடத்தும் போராட்டம் தொடர்கிறது - பீஜி நாட்டை சேர்ந்த ஒருவர் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

நாடு கடத்துவதற்காக அவுஸ்திரேலிய வில்வூட் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 இலங்கை தமிழர்கள் உட்பட்ட 11 பேர் சிறைச்சாலையின் கூரை மீதேறி நடத்தி வரும் போராட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் 9 பேரும் ஆப்கானிஸ்தானிய பிரஜை ஒருவரும் ஈராக்கிய பிரஜை ஒருவருமாக 11 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பீஜி நாட்டை சேர்ந்த ஒருவர், கூரையில் இருந்து பாய்ந்து நேற்று தமது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்தநிலையில் தாம் நாடு கடத்தப்படும் உத்தரவு விலக்கிக்கொள்ளப்படாவிட்டால் தாமும் கூரையில் இருந்து பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 11 பேரும் எச்சரித்துள்ளனர்.
தாம் இலங்கைக்கோ அல்லது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கோ அனுப்பப்படக்கூடாது என்றும், அத்துடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளை தாம் சந்திக்கவுள்ளதாகவும் அவர்கள் கோரியுள்ளனர்.
இதனையடுத்து வில்வூட் சிறைச்சாலை பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போராட்டம் நடத்தப்படுகின்ற போதும் அவர்களை தமது சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்புவதற்கான முனைப்புகளில் எந்தவித மாற்றமும் இல்லை என அவுஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment