Sunday, September 26, 2010

இணையக்கோட்டை முரட்டு ரவுடிகள்

கல்லூரிக்காலங்களில் வேடிக்கைக்காக இரவு நேரத்தில் மின்சாரத்தடையின் போதோ அல்லது பட்டப்பகலில் போர்வை போத்தியோ பிறந்தநாள் கொண்டாடியிருப்பீர்கள். அதாவது யார் அடிக்கிறார்கள் என்றே தெரியாத வண்ணம் அடி வெளுக்கப்படும். வெளிச்சம் வந்ததும் பார்த்தால் எல்லோரும் அவரவர் இடத்தில் இருப்பார்கள். அப்படி இணையத்தின் பின்பக்கம் மறைந்து கொண்டு தாக்குபவர்கள் பற்றியும் அக்கலையின் நுட்பங்கள் பற்றியும் இப்பதிவில்.

சின்னக் குழந்தைகளைத் தாக்கினால் அது இணைய அச்சுறுத்தல் (cyber bullying) என்றும், மீசை முளைத்த குழந்தைகளைத் தாக்கினால் இணையத் தொந்திரவுகள் (cyber stalking/cyber harassment) என்றும் இதனை வகைப்படுத்தியிருக்கிறார்கள். சமூக வலைப்பின்னல்கள் பெருகிப்போய்விட்ட இணையத்தில் ஒரு தனி நபரைப் பற்றித் திரித்து எழுதி இணையத்தில் வலம் வரச்செய்வதென்பது சுடுதண்ணி வைப்பது போல் மிகமிக எளிது. இதை ஏன் செய்கிறார்கள்? தனிப்பட்ட வன்மம் அல்லது மனவியாதி இரண்டில் ஒன்றாக இருக்கலாம். இணைய உலகத்தில் கருத்து விவாதங்கள் பல தளங்களில் நடந்து கொண்டேயிருந்தாலும், கருத்துக்களைத் தாக்கி விவாதிக்காமல் கருத்துச் சொல்லும் நபரின் இனம், மொழி ஆகியவற்றைச் சாடித் தாங்கள் வெற்றி பெற்றதாகக் கருதும் அன்பர்களாலேயே இணைய ரவுடித்தனம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. நிஜ வாழ்வில் முகம் காட்டி மோதும் அளவுக்குக் கூட சில இணையத்தகராறுகள் செல்வதுண்டு.


இவற்றை எப்படிச் சமாளிப்பது?. உங்கள் நிஜவாழ்வின் அடையாளத் தகவல்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதென்பது வேலியில் போவதை வேட்டிக்குள் விடும் அனுபவத்தைத் தர வல்லது. அனேக இணையத் தொந்திரவுகள் அடையாளத்திருட்டு(identity theft) மூலமே நடைபெறுகிறது. அதுபோக இணையத்தளங்களிலோ அல்லது பதிவுகளிலோ கருத்து மோதல்களில் பெரும் காலத்தை செலவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் கருத்தை ஒரே முறை பதிவு செய்வதோடு இணையத்தின் மூலம் நாம் செய்யும் சமூக சேவையினை முடித்துக் கொள்வது நன்று. கருத்துக்கு எதிர்வினை, எதிர்வினைக்கு எதிர்வினை என்பதெல்லாம் காலவிரயம் என்பது அனுபவசாலிகளின் கருத்து. இணையத்தில் பலதரப்பட்ட நபர்கள் வருவார்கள், இருதரப்பிலும் ஒரே மாதிரியான மனமுதிர்ச்சியையும், கருத்து விவாதம் செய்யும் பாங்கினையும் எதிர்பார்க்க முடியாதென்பதும் ஒரு காரணம்.


இந்தியாவின் முதல் இணையத் தொந்திரவு குற்றப்பதிவு தில்லியைச் சேர்ந்த திருமதி. ரித்து கொஹ்லி அவர்களால் பதிவு செய்யப்பட்டது. காரணம் அவரது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை வைத்து தினமும் ஒருவர் இணைய அரட்டையில் கும்மியடித்து வந்ததும், அதன் விளைவாக நேரங்கெட்ட நேரத்தில் ஏகப்பட்ட நபர்கள் திருமதி. ரித்து அவர்களின் வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்து 'வரலாமா' என்று கேட்க ஆரம்பித்ததும் தான். பின்னர் வழக்கம் போல வலையிணைப்பு முகவர் எண் (I.P) மூலம் குற்றவாளி கணடுபிடிக்கப்பட்டு முட்டிக்கு முட்டி பெயர்க்கப்பட்டாலும் இதன் மூலம் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து திருமதி. ரித்து கொஹ்லிக்கு மட்டுமே வெளிச்சம்.


தனிப்பட்ட நபர்களால் மட்டுமின்றி கூட்டம் சேர்ந்து கொண்டு ஒருவரைக் குறிவைத்து இணையத்தில் தொந்திரவு செய்வதும் இணையத்தின் மாமூல் வாழ்க்கையில் ஒரு பகுதியே. இவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?. நிஜ வாழ்க்கையைப் பாதிக்காதவரை இதையெல்லாம் கண்டும் காணாமல் போய் விடுவதே சிறப்பு. கவன ஈர்ப்பைப் பெறுவதே குற்றவாளிகளின் முதல் நோக்கம். அது கிடைக்காத வருத்தத்தில் அவர்களாகவே மனநலக் காப்பகத்தில் சென்று சேர்ந்து கொள்வதின் வாய்ப்பதிகம். அப்படி தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம். இணையத்தில் அனைவரது நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. கால அவகாசங்கள் வேறுபடுமே ஒழிய, எவரும் தப்பிக்க முடியாது.

உங்கள் மற்றும் குடும்பத்தினர், குழந்தைகள் ஆகியோரின் படத்தினை வலைப்பக்கங்களிலோ, பதிவுகளிலோ பிரசுரிக்கும் முன் எதையும் தாங்கும் இதயம் இருப்பதை உறுதி செய்து கொள்வது நலம்.ஒரு தாய் தன் குழந்தையின் படத்தையே, 'ஆதரவற்ற குழந்தை, உதவி செய்யுங்கள்' என்ற கோரிக்கையுடன் மின்னஞ்சல்களில் பார்த்த சம்பவத்தை உலகம் கண்டிருக்கிறது. தொலைபேசி எண்கள், பழைய எண், புதிய எண் போன்ற நுணுக்கமான விவரங்களுடன் கூடிய வீட்டு முகவரி ஆகியவற்றை வலையேற்றுவதைத் தவிர்க்கவும். அதனினும் முக்கியமானது மற்றவர்களுடைய விவரங்களை அவர்களது அனுமதியின்றி பிரசுரிப்பது.கடந்த காலத்தில் இணையத் தொந்திரவினால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் த்ரிஷா, குஷ்பு, நயன் தாரா போன்ற அபலைகள் பலர் இருப்பதால் அரசு அவர்களுக்கென ஒரு நலவாரியம் அமைத்து, நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பிருந்தாலும், நோபல் பரிசு பெற்ற ஒரு தமிழரின் பிரத்யேக மின்னஞ்சலை இணையத்தில் வெளியிட்டு, 'வந்து குவியும் மின்னஞ்சல்களை அழித்து, அழித்து மணிக்கட்டு வலிக்கிது, அழுதுருவேன்..' என்று அவரை ஊடகத்தில் கதற விட்ட கதை ஒரு சமீபத்திய உதாரணம்.


இவ்வளவுக்குப் பிறகும், இணையத்தின் மூலம் தொந்திரவுகள் ஏற்படின் கீழ்கண்ட சுட்டியில் இருக்கும் பட்டியலில் உங்களுக்கு அருகே வசிக்கும் நண்பருக்கு பேசா அழைப்புக் கொடுத்து (missed call) விவரத்தைச் சொன்னால் மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்.


உங்களின் இணைய அனுபவம் என்றென்றும் இனிக்கும் அனுபவமாக இருக்க வாழ்த்துக் கூறி இப்பதிவு நிறைவடைகிறது.

No comments:

Post a Comment