Monday, September 13, 2010

ஒசமா பின்லேடன் பேரப் பிள்ளைகளை சுமந்த வாடகைத் தாய் மீது தாக்குதல்

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் ஒமர் பின்லேடனின் குழந்தைகளை சுமந்திருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த வாடகைத் தாய் மீது சிலர் திடீர் தாக்குதல் நடத்தியதில் அவரது கர்ப்பம் கலைந்து வயிற்றில் வளர்ந்து வந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்து விட்டன.
பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன். இவர் 54 வயதான இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெய்னாவை (முன்னாள் பெயர் ஜேன் பெலிக்ஸ் பிரவுன்) மணந்து கொண்டார். ஆனால் ஜெய்னா கர்ப்பமாகத் தகுதி இல்லாதவராக இருந்ததால் லூயிஸ் போலார்ட் என்ற பெண்ணை வாடகைத் தாயாக அமர்த்தினர்.
அவர் சோதனைக் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட ஒமர் பின் லேடனின் கருவை தனது வயிற்றில் சுமந்து வந்தார். 10 வார கால கர்ப்பமாக அவர் இருந்து வந்தார். இந்த நிலையில், லூயிஸ் மீது திடீரென சிலர் நடத்திய தாக்குதலில் வயிற்றில் இருந்த கர்ப்பம் கலைந்து விட்டது.
ஜெய்னாவும், லூயிஸும் சிரியாவில் பயணம் மேற்கொண்டிருந்தனர். இருவரும் சேர்ந்து போய்க் கொண்டிருந்தபோது இரண்டு பேர் வந்து லூயிஸை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் நிலை குலைந்து விழுந்தார். இதனால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது.
இந்த தாக்குதலில் லூயிஸுக்கு கை, கால்கள், கண்களில் அடி விழுந்து காயம் ஏற்பட்டது.
24 வயதான லூயிஸ், பிரிஸ்டலைச் சேர்ந்தவர். தாக்குதலுக்குப் பின்னர் தனது வீட்டுக்குத் திரும்பிய லூயிஸ், பின்னர் மருத்துவமனைக்குச் சென்று சோதனைக்குட்படுத்திக் கொண்டார். அப்போது ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான் கருச்சிதைவு ஏற்பட்டது தெரிய வந்தது.
எதற்காக இந்தத் தாக்குதல் நடந்தது என்பது தெரியவில்லை. இருப்பினும் லேடனின் பேரக் குழந்தைகளை சுமந்திருந்த காரணத்தால்தான் அவர் தாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஒமரிடம் கேட்டபோது, எல்லாம் விதி என்று மட்டும் பதிலளித்தார். ஜெய்னாவும், ஒமரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment