Wednesday, September 1, 2010

தற்கொலை செய்ய அனுமதி கேட்டு வழக்கு தொடுத்துள்ள 70 வயது பெண்மணி

முதுமையில் யாருமின்றி தனியாக நோய்களுடன் வாழும் 70 பெண்மணி ஒருவர் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஹரி பாசம்மா (வயது 70). இவர் பெங்களூர் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியதாவது:-

முதுமையில் இருக்கும் என்னை கவனித்து கொள்ள எனக்கு வாரிசுகள் யாரும் இல்லை. உறவினர்களும் இல்லை. இடுப்பு “டிஸ்க்” பகுதி விலகி வலியால் அவதிப்படுகிறேன். மூட்டு வலியும் உள்ளது. நீரிழிவு நோயாளி.

இதனால் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறேன். எனவே நான் ஒரேடியாக செத்து விட முடிவு செய்து உள்ளேன். நான் சாவை சந்தோஷமாக வரவேற்கிறேன். எனவே நான் சாவதற்கு அனுமதி தர வேண்டும்.

தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் நான் சட்டத்தை மீற விரும்ப வில்லை. எனவே நான் சாவதற்கு சட்ட ரீதியாக அனுமதி தரவேண்டும். விஷ ஊசி போன்றவற்றை கொடுத்தால் அதன் மூலம் உயிரை விட தயாராக இருக்கிறேன்.

இவ்வளவு கஷ்ட நிலையிலும் நான் உலகுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. எனக்கு பலர் உதவி செய்வதாக கூறுகிறார்கள். ஆனாலும் என் வலியையும், அவதியையும் நான்தானே தாங்கி கொள்ள வேண்டும். அது என்னால் முடியவில்லை. எனவே சாவுக்கு அனுமதி கொடுங்கள்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். அவருக்கு இருக்கும் நோயை குணப்படுத்த முடியுமா? என்று டாக்டர்கள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளார்.

ஹரிபாசம்மா சாவுக்கு அனுமதி கேட்டு ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதற்கு எந்த பதிலும் இல்லாததால் ஐகோர்ட்டை நாடியுள்ளார்.

No comments:

Post a Comment