எந்திரகதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது நமக்குள் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது. சந்தோஷத்தைக் கெடுக்கிறது. எனவே கோபத்தை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது சந்தோஷ வாழ்க்கைக்கான முக்கியத் தேவையாகிறது! நம்மை நாமே வெறுக்க நமக்குள் எழும் கோபமே போதுமானது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் `சீரியசாக’ எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரபரப்பின்றி அமைதியாக அணுகிப் பாருங்கள். மனஅழுத்தம் நெருங்காது. மொத்த வேலைகளையும் ஒரே நேரத்தில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் முக்கியமானதை முதலிலும், முக்கியமல்லா தவற்றை சாவகாசமாகவும் செய்யுங்கள். இதனால் மன உளைச்சலை தவிர்த்து விட முடியும். பிறகு ஏன் கோபம் வரப் போகிறது? சில வேலைகள் நீண்டகாலம் இழுத்துக் கொண்டு போகும். அந்த தாமதம் சில நேரங்களில் எரிச்சலைக் கிளப்பும். அப்போது உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாதுதான். எனினும் கோபம் என்பது மற்ற உணர்வுகளைப் போன்று சாதாரண உணர்வுதான் என்று புரிந்து கொண்டு அந்த கோபத்தினையும் பக்குவமாக வெளிப்படுத்துவது புத்திசாலித்தனம். நீங்கள் எதையும் குறித்த நேரத்தில் செய்யாமல் சோம்பல் மிகுந்தவராக இருந்தால் வழக்கமாகச் செய்ய வேண்டிய காரியங்களை உங்களால் நிறைவேற்ற முடியாது. அது உங்களுக்கு மனஉளைச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். அதனால் முக்கியமான வேலைகளை முறையாகச் செய்யாமல் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக செய்து பிரச்சினைக்குள்ளாவீர்கள். “வேலைக்கு கிளம்பும்போது கடைசி பஸ், ரெயிலை தவறவிட்டுவிட்டால் மனஅழுத்தம் ஏற்படுகிறதா? அலுவலகத்தில் உயர் அதிகாரியோ, உடன் பணிபுரிபவரோ உங்களை குறை சொன்னால் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? உறவினர்கள், நண்பர்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்து கலங்குகிறீர்களா? அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினேன் என்று உள்ளக் குமுறல் கொள்கிறீர்களா? இப்படி நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்களுக்கு எளிதாக கோபம் வந்துவிடும். கோபம் ஏற்படுவதற்கான உள்ளார்ந்த அடிப்படைக் காரணங்களை நீங்கள் புரிந்து கொண்டால் அவற்றிலிருந்து உங்களை எளிதாக விடுவித்துக் கொள்ள முடியும். கோபம் ஏற்படும் சூழ்நிலைகளைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருக்கச் சொல்லும் உங்கள் அறிவுதான் உங்களது கோபத்தினை அடக்குவதற்கான முதற்படியாகும். கோபப்படும் போது உங்கள் உடலில் ஏற்படும் அங்க அசைவுகளைக் கவனியுங்கள். நரம்புகள் முறுக்கேறுதல், அதிகப்படியான இதயத்துடிப்பு, வியர்வை வழிந்தோடல் ஆகியவற்றினை கோபப்படும் போது உணரலாம். இத்தகைய அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் போதே நீங்கள் கோபத்தினை அடக்க முயற்சி செய்வது நல்லது. கோபம் ஏற்படும் இம் மாதிரியான சூழ்நிலைகளில் இருந்து விலகி நீங்கள் வேறு இடத்திற்கு சிறிதுநேரம் கால்நடையாக உலாவச் செல்லலாம். உங்கள் நண்பர்களுள் ஒருவரைச் சந்தித்து சிறிது நேரம் அரட்டையடிக்கலாம். அல்லது நாம் இனிமேல் கோபப்படவே கூடாது என்று உங்களுக்குள்ளாகவே உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். கோபம் தான் சிறைகளை நிரப்புகிறது. கோபம் தான் நல்ல மனிதர்களையும் குற்றவாளிகளாக்குகிறது என்பதை உணருங்கள். |
Saturday, December 18, 2010
கோபம் செய்யும் கோலம்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment