யாழ். மாவட்டத்திலுள்ள பல பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் இப்போட்டிக்கு விண்ணப்பித்து, தொடர்ந்து தமது இணையத்தளங்களை வடிவமைத்து வருகிறார்கள்.
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் உள்ளூர் மயமாக்கப்பட்ட செயல்களுக்கான சிறப்பு மையமானது, கணினியை உள்ளூர் மொழிகளில் பயன்படுத்துவது சம்பந்தமான ஆய்வுகள் மற்றும் செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இம்மையத்தினால் மென்பொருள்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உள்ளூர்மயமாக்கம் (Localisation) செய்யப்பட்டு வருகின்றன.
அத்தோடு உள்ளடக்க உள்ளூர்மயமாக்கம், உள்ளூர்மொழிகளில் உள்ளடக்க அபிவிருத்தி, உள்ளூர்மொழிகளில் கணிமை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் ஆகியனவும் இம்மையத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் ஆகும். இச்சிறப்பு மையமானது LAKapps மையம் எனவும் அழைக்கப்படுகிறது.
தமிழ்மொழியில் கணிமை தொடர்பான செயற்திட்டம் ஒன்று கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய பாடசாலை மாணவர்கள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் கிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளிலும், அறிவகங்களிலும், கணினி வளநிலையங்களிலும் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான ஒரு இணையத்தள வடிவமைப்புப் போட்டியும் நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன. இச்செயற்திட்டம் மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இவ்வருடம் யாழ் மாவட்டத்தில் தமிழ் கணிமை சம்பந்தமான செயற்திட்டம் ஒன்று இந்த LAKapps மையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய யாழ் மாவட்டத்தில் உள்ள யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி ஆகிய கல்வி வலயங்களிலுள்ள பல பாடசாலைகளிலும், புலோலி கணினி வள நிலையத்திலும், யாழ். உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்திலும் தமிழ் கணிமை சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், தமிழ் இணையத்தள வடிவமைப்பு பற்றிய பயிற்சிப்பட்டறைகள் ஆகியன நடத்தப்பட்டன.
இக்கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளில் ஏறக்குறைய 1000 மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
யாழ். பாடசாலைகளிலிருந்து 180 இற்கும் அதிகமான மாணவர்கள் தனியாகவும் குழுக்களாகவும் இணைந்து 69 இணையத் தளங்களைப் போட்டிக்காக வடிவமைத்து வருகிறார்கள். இப்போட்டிக்காக இணையத்தளங்களை சேமிப்பதற்கு இணைய இடவசதியை LAKapps மையம் இலவசமாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இதற்கமைய விண்ணப்பதாரிகள் தங்களது இணையத்தளங்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்து எமக்குச் சமர்ப்பிக்கவேண்டும்.
இப்போட்டியில் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைப் பெறும் இணையத்தளங்களை வடிவமைத்த வெற்றியாளர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும்.
அத்தோடு ஒவ்வொரு வலயத்திலிருந்தும் மேலதிகமாக தகுதியான ஆகக் கூடிய இரண்டு இணையத்தளங்களுக்குச் சிறப்புப் பரிசில்களும் தகுதியானவை என நடுவர்களால் தெரிவு செய்யப்படும் இணையத்தளங்களை வடிவமைத்த மாணவர்களுக்கு பங்கு பற்றியதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இவை அனைத்தும் அடுத்த மாதம் இடம்பெறும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.
இந்தச் செயற்திட்டம் பற்றிய மேலதிக விபரங்களுக்கும் விசாரணைகளுக்கும்
இணையத்தளம் : www.lakapps.lk/llcj/
மின்னஞ்சல் – sarvesk@uom.lk
தொலைபேசி – 0114216061 - உடன் தொடர்பு கொள்ளலாம். _
No comments:
Post a Comment