Thursday, September 16, 2010

இன்று சர்வதேச ஓசோன் தினம்

  இன்று சர்வதேச அளவில் ஓசோன் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. பூமியானது உயிர் வாழக் கூடிய கோளாக அமைந்திருப்பதற்கு பிரதான காரணமாக ஓசோன் படை திகழ்கின்றது. உலகில் அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வதற்குத் தேவையான அமைப்பினை ஓசோன் படை பெற்றுக் கொடுத்துள்ளது. ஓசோன் படையின் முக்கியத்துவத்தினை முழு உலகிற்கும் உணர்த்தும் வகையிலும் ஓசோன் படைக்கு நன்றி கூறும் முகமாகவும் ஆண்டு தோறும் செப்டம்பர் 16ஆம் திகதி சர்வதேச ஓசோன் தினமாக நினைவுகூரப்பட்டு வருகின்றது.

1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி ஓசோன் படையைத் தாக்கத்திற்குட்படுத்தும் இரசாயனங்களுக்கு எதிராக கனடா நாட்டில் "மொன்றியல்" உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்கமைய 1995ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச ஓசோன் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஓசோன் படையானது, பூமியைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்திலுள்ள படையாகும். இது வளிமண்டலத்தில் 90 வீதமான பகுதியினை உள்ளடக்கியுள்ளது. புவியின் மேற்பரப்பிலிருந்து 15 - 45 கிலோ மீற்றர் உயரத்தில் இது பரவியுள்ளது.

சூரியனிலிருந்து பூமியை நோக்கித் தெறிப்படையும் புற ஊதாக் கதிர்கள், கழி ஊதாக் கதிர்கள், செவ்வூதாக் கதிர்கள் என்பன நேரடியாக பூமியினை தாக்காமல் பூமியின் பாதுகாப்புக் கவசமாக ஓசோன் படை விளங்குகின்றது.

தற்போது ஓசோன் படை பல தாக்கங்களுக்குட்பட்டு பாதிப்படைந்து வருகின்றது. இதனை ஓசோன் துவாரம் என்று அழைப்பர். இதன் மூலம் உலகமும் உலக மக்களும் பாதிப்படையக் கூடிய சாத்தியக் கூறு இருப்பதாக விஞ்ஞானிகள் தம் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.

ஓசோன் படையினது பாதிப்பிற்கு முழுக்க முழுக்க மனிதனின் செயற்பாடுகள் தான் காரணம், இயற்கை அம்சங்களினால் இது எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. எனவும் தெரிவிக்கப்படுகின்றது.குளோரோ புளோரோ காபன், ஐதரோ குளோரோ காபன், புளோரோ காபன் என்னும் வாயுக்களின் மூலமே ஓசோனின் படை மண்டலம் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இவை பாரிய கைத்தொழிற் சாலைகளிலிருந்தே வெளியேற்றப்படுகின்றது. மனிதனின் கைத்தொழில், விவசாய நடவடிக்கைகளே ஓசோன் பாதிப்பிற்குக் காரணமாகும்.1980ஆம் ஆண்டு ஓசோனில் பாரிய பாதிப்பு ஏற்பட்டதற்கு குளிர்சாதனப் பெட்டிப் பாவனை, இரசாயன வாசனைத் திரவியங்களின் பயன்பாடுகள் என்பனவே முக்கிய காரணிகளாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஓசோனில் ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:

கைத்தொழில் நடவடிக்கைகளின் போது வெளியேற்றப்படும் ஓசோனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வாயுக்களின் அளவினைக் கட்டுப்படுத்த புதிய தொழில் நுட்பங்களைக் கண்டறிய வேண்டும்.

விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயன பசளைகள், கிருமி நாசினிகள் ஆகியவற்றின் அளவினைக் குறைக்க வேண்டும். அல்லது இயற்கை உத்திகளைக் கையாள வேண்டும்.

குப்பைகள் எரிப்பதினைத் தடுத்து அவற்றினை வேறு வகையில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நகப் பூச்சு, இரசாயன வாசனைத்திரவியங்களின் பயன்பாடு ஆகியவற்றின் பயன்பாடுகளைக் குறைக்க வேண்டும். குளோரோ புளோரோ காபன் காபன் வெளியேறும் குளிர்சாதனப் பெட்டிகளை பாவனையிலிருந்து அகற்றி நவீன குளிர்சாதனப் பெட்டிகளை பாவனைக்கு உட்படுத்த வேண்டும்.

ஓசோனில் ஏற்படும் தாக்கத்தால் ஏற்படும் தீமைகள்:

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதனால், துருவப் பனிக்கட்டிகள் கரைந்து பூமியே அழிவடையு அபாயம் ஏற்படும். புற ஊதாக்கதிர்களின் கதிர் வீசலினால் தோல் புற்றுநோய்கள், கண் தொடர்பான நோய்கள் ஏற்படும். நாம் சுவாசிக்கும் காற்று நச்சுக்காற்றாக மாற்றமடையும். இதனால் நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படும். சில பயனுள்ள நுண்ணங்கிகள் அழிக்கப்படுகின்றன.

இக்கதிர்வீசல் தாவர வளர்ச்சியினை கட்டுப்படுத்துவதால் விவசாய உற்பத்தி வீழ்ச்சிக்குக் காரணமாகின்றது. மீன்கள், ஊர்வன போன்றவற்றின் முட்டைகள் அழிவடைகின்றன.

புவியில் உயிர்ச் சமநிலை பாதிக்கப்படுகின்றது. இப்பாதிப்புக்களைத் தடுப்பதற்காக, ஓசோனில் ஏற்பட்டு வரும் தாக்கங்களைக் குறைப்பது எம் கையிலே உள்ளது. முழு உலகினையும் பாதுகாக்கும் கடமை எம் அனைவருக்கும் உண்டு. எனவே உலகினை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்ற, இன்று முதல் நாம் ஓசோன் படையின் பாதுகாப்புக்கான நடவடிக்கைக்குக் கை கொடுப்போம்.

No comments:

Post a Comment