Saturday, August 28, 2010

ஏழு பயணிகள் பலியெடுப்புடன் கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது (வீடியோ இணைப்பு)

பிலிப்பைன்ஸ், மணிலாவில் சுற்றுலாப் பயணிகளின் பேருந்தை கடத்திய முன்னாள் பொலிஸ்காரர் உட்பட எண்மர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

அவர்களில் நான்கு பேர் கடத்தல்காரனை நோக்கிப் பொலிஸார் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பகுதி வழியாக தப்பி வந்தவர்கள் என பொலிஸ் உயரதிகாரியான நெல்சன் யாபட் தெரிவித்தார்.

கடத்தல்காரன் பொலிஸாரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியபோது பொலிஸார் பதில் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து கடத்தல்காரன் உயிரிழந்தார்.

ரோலாண்டோ மென்டோசா (55) என்ற முன்னாள் பொலீஸ்காரர் தான் பணியிலிருந்து நீக்கப்பட்டதால் வெறுப்படைந்து ஹாங்காங்கை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வைத்து இன்று காலையில் கடத்தியிருந்தான்.

கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்த பின்னரும் கொட்டும் மழையிலும் பொலிஸ் மற்றும் அவசரகால வாகனங்கள் பேருந்தை சுற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஏழு பணயக் கைதிகளின் சடலங்கள் கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடத்தல்காரரான முன்னாள் பொலிஸ்காரர் திருட்டு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தமக்கு மீண்டும் வேலை தரவேண்டுமென்றும் தன்னைப் பதவியிலிருந்து நீக்கியோர்மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியே இந்தக் கடத்தலை அவர் மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment